
9.8 மில்லியன் ரூபாய் மோசடி – குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரி கைது
மென்பொருள் அமைப்பு ஒன்றை நிறுவியமை தொடர்புடைய நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் நேற்று (14) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கே. ஹேரத் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் அந்தத் திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றியவர் .
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விசாரணையாளர்களின் கூற்றுப்படி, “User Management Module” என அடையாளம் காணப்பட்ட மென்பொருளை நிறுவுவதற்காக 9.8 மில்லியன் ரூபாய்க்கும் அதிகத் தொகை செலுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், அந்த மென்பொருள் ஒருபோதும் நிறுவப்படவில்லை என்றும், அமைப்பை வழங்காமலேயே அரசாங்க நிதி மோசடியாகப் பெறப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொது நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டமை மற்றும் கையாடல் செய்யப்பட்டமை குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

