
கனமழையால் ஏற்பட்ட விவசாய பாதிப்பிற்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை – அறிக்கைகளை 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு
கனமழையினால் விவசாய நிலங்கள் சேதமடைந்த விவசாயிகள், 14 நாட்களுக்குள் தத்தமது விவசாய சேவை நிலையங்களில் இழப்பீட்டு அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபை அறிவித்துள்ளது
மதிப்பீடுகளைத் தொடர்ந்து, சேதத்தின் அளவை அடிப்படையாகக் கொண்டு இழப்பீடு வழங்கப்படும் என்றும், இதற்கமைய நெல், சோளம், உருளைக்கிழங்கு, சோயா, மிளகாய் மற்றும் பெரிய வெங்காயம் ஆகிய பயிர்களுக்கு ஹெக்டேருக்கு அதிகபட்சமாக ரூ. 100,000 வரை இழப்பீடு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தத் திட்டம் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதாகவும், விவசாயிகளிடமிருந்து எவ்வித காப்புறுதிப் முன்பணமும் வசூலிக்கப்பட மாட்டாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டு யால பருவத்தின் தொடக்கத்தில் ஏற்பட்ட குறைந்த அழுத்த வானிலை காரணமாக, பல மாவட்டங்களில் பயிர்ச்செய்கை நிலங்கள் நீரில் மூழ்கி, ஆரம்ப நிலையிலேயே பயிர்கள் சேதமடைந்ததைத் தொடர்ந்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விவசாயம், கால்நடை, நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர், இந்த காப்புறுதி திட்டத்தை தொடர்ச்சியாக கண்காணித்து விவசாயிகளுக்கு அதிகபட்ச பலன்கள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு காப்புறுதிச் சபைக்கு அறிவுறுத்தியுள்ளதுடன், கிராமப்புறப் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வெள்ளநீர் வடிந்தவுடன் பயிர்ச் சேதங்களின் முழுமையான விபரங்களை துல்லியமாக மதிப்பிட முடியும் என்றும், அதன் மூலம் பாதிக்கப்பட்ட விவசாய சமூகங்களுக்கு உரிய நேரத்தில் இழப்பீடுகளை வழங்க முடியும் என்றும் விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

