
பஞ்சாப்பில் விவசாயிகள் போராட்டம்
வேளாண் விளைபொருட்கள், பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வலியுறுத்தி, பஞ்சாப்- அரியானா எல்லையில் உள்ள கனவுரியில் பஞ்சாப் விவசாய சங்க தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் (வயது 70) கடந்த மாதம் 26ம் திகதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அவரது உடல்நிலை மோசமாகி வருகிறது. அதேவேளை, ஜக்ஜித் சிங்கை 31ம் தேதிக்குள் மருத்துவமனையில் அனுமதிக்கும்படி பஞ்சாப் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப்பில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் அமர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சண்டிகர் – பட்டியாலா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதியடைந்துள்ளனர். ஜண்டன் நகரில் உள்ள சுங்கச்சாவடி அருகே அமர்ந்தும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.