
கபில சந்திரசேனவிடமிருந்து 6 கோடி பெற்றதாக கூறப்படும் விசாரணைக்கான CIDயின் அழைப்பை ஏற்று முன்னிலையாக தயாராக இருப்பதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அழைப்பை ஏற்று, அங்கு முன்னிலையாகத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எயார்பஸ் (Airbus) கொள்வனவு கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக எதிர்வரும் மே 12 ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மறைந்த முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோது, தான் குறித்த தினத்தில் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி உறுதிப்படுத்தினார்.
2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக 06 எயார்பஸ் A-330 விமானங்கள் மற்றும் 08 எயார்பஸ் A-350 விமானங்களை கொள்வனவு செய்தபோது, 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலஞ்சமாகப் பெறப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா விஜேநாயக்க ஆகியோர் மீது இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.
தமக்குக் கிடைத்த 2 மில்லியன் அமெரிக்க டொலர்களில், அன்றைய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவிற்கு 20 மில்லியன் ரூபாவையும், அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு 60 மில்லியன் ரூபாவையும் வழங்கியதாக கபில சந்திரசேன தெரிவித்ததாக ஆணைக்குழு அதிகாரிகள் நீதிமன்றத்தில் குறிப்பிட்டிருந்தனர்.
எனினும், கபில சந்திரசேனவின் சட்டத்தரணி இதனை மறுத்துள்ளதுடன், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தனது கட்சிக்காரரை அச்சுறுத்தி வாக்குமூலத்தைப் பெற்றுள்ளதாக நீதிமன்றத்தில் சத்தியக்கடதாசி தாக்கல் செய்துள்ளார்.

