
யாழில். ஹெரோயினுடன் கைதானவருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை
1 கிராம் 440 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் 7 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.
யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1.44 கிராம் கெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்ததாக குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் நீண்டகாலமாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி A.G. அலெக்ஸ்ராஜா இன்று தீர்ப்பளித்தார்.
அதன்படி, குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனையும், 1 இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.
மேலும், அபராதத் தொகையை செலுத்தத் தவறும் பட்சத்தில், மேலதிகமாக 12 மாத கால சாதாரண சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

