
பிள்ளையானை சிறையில் சந்தித்த மஹிந்த – பசில் – நாமல் ராஜபக்ஷக்கள்- அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தை நீதிமன்றில் அம்பலப்படுத்திய பிரதி சொலிசிட்டர் ஜெனரல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் இருந்த போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் முன்னாள் ராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானைச் சந்தித்துள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்து ஒரு வாரத்திற்குள் பிள்ளையானுக்கு பிணை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என இந்த சந்திப்பின் போது ராஜபக்ஷக்கள் குழுவினர் பிள்ளையானுக்குத் தெரிவித்ததாக அவர் மேலும் கூறினார்.
பிள்ளையானின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான அசாத் மௌலானாவிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இந்தத் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.
தற்போது பிரான்சில் வசித்து வரும் அசாத் மௌலானாவின் வாக்குமூலம், பிரான்சில் உள்ள (இலங்கை) தூதரகத்தில் வைத்து பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரியவந்துள்ளது.

