
மாத்தறை சிறையில் உள்ள கைதிகள் இடமாற்றம்
மாத்தறை சிறைச்சாலையில் நேற்று (22) இரவு ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக, சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்ற இன்று (23) காலை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாத்தறை சிறைச்சாலையில் இருந்து அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு இரண்டு கைதிகளை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்றிரவு 8 மணியளவில் சிறைச்சாலையில் மோதலில் ஈடுபட்டதால் இந்நிலைமை ஏற்பட்டது.
சிறைச்சாலையின் உயர் பாதுகாப்பு அறைகளில் கைதிகள் சிறைச்சாலை அதிகாரிகள் மீது கற்கள் கொண்டு தாக்குதல் நடத்தினர். இந்நிலைமையைக் கட்டுப்படுத்த சிறைச்சாலை அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்தக் கலவரத்தில் மூன்று சிறைச்சாலை அதிகாரிகள் காயமடைந்து மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என மாத்தறை சிறைச்சாலை கண்காணிப்பாளர் மங்கள வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று காலை, சிறைச்சாலைக்குள் இருந்த நிலைமை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதுடன் சுமார் 200 கைதிகள் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதில் 26 பெண் கைதிகளும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கலவரத்தில் எந்த கைதியும் காயமடையவோ அல்லது கொல்லப்படவோ இல்லை எனவும் கைதிகளின் உறவினர்கள் இச்சம்பவம் குறித்து கவலைக் கொள்ள வேண்டாம் என சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

