
போலி 5000 ரூபாய் நாணயத்தாள்களுடன் கண்டியை சேர்ந்த சந்தேக நபர் கைது
போலி நாணயத்தாள்களுடன் கண்டியை சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹதரலியத்த போலீசாருக்கு போலி நாணயத்தாள் ஒன்று தொடர்பில் கிடைத்த இரகசிய தகவலின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையின் போது இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
ஹதரலியத்த பகுதியில் உள்ள ஒரு விற்பனை நிலையத்திற்கு வந்த ஒருவர் போலியான 5,000 ரூபாய் நோட்டு வழங்கப்பட்டமை தொடர்பாக நேற்று மதியம் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையின் கண்டி, உடுவாவைச் சேர்ந்த 32 வயதுடைய சந்தேக நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரிடம் இருந்து 03 போலியான 5,000 ரூபாய் நோட்டுகள், 02 போலியான 500 ரூபாய் நோட்டுகள் மற்றும் 02 போலியான 100 ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
மேலும், சந்தேக நபரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது, போலி 50 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்ட 09 காகிதங்கள் , போலி 100 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்ட 04காகிதங்கள் , போலி 500 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்ட 04 காகிதங்கள் மற்றும் போலி 5000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்ட 06 காகிதங்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
இதேவேளை , இந்தப் போலி நாணயத் தாள்களை அச்சிட்ட சந்தேக நபரைக் கைது செய்ய புலனாய்வு அதிகாரிகள் கலகெதர பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்திற்குச் சென்றபோது குறித்த நபர் அங்கு இருக்கவில்லையென போலீசார் தெரிவித்துள்ளனர் .
நாணயத் தாள்களை அச்சிடப் பயன்படுத்தப்பட்ட ஒரு கணினி மற்றும் அச்சுப்பொறி கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
ஹதரலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

