
பிள்ளையானை விடுதலை செய்யக்கோரி கையெழுத்து வேட்டை
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளைனை விடுதலை செய்யக்கோரி கையெழுத்து வேட்டையொன்று வாழைச்சேனையில் முன்னெடுக்கப்பட்டது.
முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் ரவிந்திரநாத்தின் கடத்தல் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் , கடந்த ஏப்ரல் மாதம் மட்டக்களப்பு வாழைச்சேனை பேத்தாழையில் பிள்ளையான் என்ற சிவனேசதுரை சந்திரகாந்தன் பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சரின் விசாரணையை துரிதப்படுத்த வேண்டியும் நீதியான விசாரணை நடத்த கோரியும் பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்க கோரியும் இது தொடர்பில் ஐனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசெல்லும் வகையில் கையெழுத்து பெறும் நடவடிக்கை பேத்தாழை பிரதான வீதியில் முன்னெடுக்கப்பட்டது.
கையெழுத்து நடவடிக்கை மாவட்டத்தில் பல இடங்களிலும் இடம்பெறவுள்ளதாக கோறளைப்பற்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் நவராசலிங்கம் நிமல்ராஜ் தெரிவித்தார்.
இதன்போது ஜனாதிபதிக்கு அனுப்பும் வகையில் மகஜர் ஒன்றும் வாசிக்கப்பட்டது.
“எமது தாய் நாட்டின் இறைமையும் தேசிய ஒருமைப்பாடும் ஆபத்துக்குள்ளாகி இருந்த வேளையில் அவற்றை மீட்டெடுக்க அவர் போன்றவர்கள் ஆற்றிய சேவைகள் இன்று மறக்கப்பட்டால் எதிர் காலத்தில் சிறுபான்மை இனங்களில் இருந்து இவ்வாறான தேச பக்தர்கள் எவ்வாறு தோன்ற முடியும் என்பது தேசத்தின் ஒருமைப்பாட்டை நேசிக்கும் சகலரும் சிந்திக்க வேண்டிய தருணம் இதுவாகும்”. என ஜனாதிபதியின் கவனத்திற்கு அனுப்பும் மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

