
தேசிய கொள்கைத்திட்டத்திற்கு அமைய கைத்தொழில்களுக்கு காணிகளைப் பெற்றுக் கொள்வதில் முறையான பொறிமுறையொன்று தொடர்பில் விரிவான கவனம்
பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள ஐந்து நிறுவனங்களின் செயலாற்றுகை குறித்து ஆராயப்பட்டது.
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர தலைமையில் குறித்த துறைசார் மேற்பார்வைக் குழு அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இது பற்றி ஆராயப்பட்டது. இக்கூட்டத்தில் கௌரவ கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் பிரதியமைச்சர் சதுர அபேசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதற்கு அமைய, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுக்கான செயலாற்றுகை அறிக்கை, தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையின் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை, மாணிக்கக்கல் ஆபரண ஆராய்ச்சி பயிற்றுவிப்பு நிறுவனத்தின் 2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை, இலங்கை ஏற்றுதி அபிவிருத்தி சபையின் 2021, 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை, பி.சி.சி இலங்கை லிமிடட் நிறுவனத்தின் 2021/2022 மற்றும் 2022/2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை, தேசிய உப்பு நிறுவனத்தின் 2021/2022 மற்றும் 2022/2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை போன்றவை இங்கு கவனத்தில் கொள்ளப்பட்டன.
இக்குழுக் கூட்டத்தில் நாட்டின் தொழில்துறையின் வளர்ச்சி எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், முன்னர் கடைப்பிடிக்கப்பட்ட முறைகளின் படி முதலீட்டாளர்களுக்குக் காணிகளை வழங்குவதில் பல சிக்கல்கள் காணப்படுவதாக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார். இதற்கு அமைய, புதிய தொழில்களுக்கு ஒரு முதலீட்டாளருக்குக் காணிகளை வழங்க 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்று அவர் சுட்டிக்காட்டினார். சர்வதேச கருத்துக்களின்படி, ஒரு நாட்டின் நிலப்பரப்பில் 3% பொதுவாக தொழில்துறைகளுக்கு ஒதுக்கப்பட்டாலும், இலங்கையில் இந்த எண்ணிக்கை 0.01% என்ற விகிதத்திலேயே காணப்படுவதாக செயலாளர் கூறினார்.
இதற்கு முன்னர் காணப்பட்ட தேசிய கொள்கைத்திட்டத்திற்கு அமைய கைத்தொழில்களுக்கு ஏற்ற காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்காமல், அரசியல் அல்லது வேறு காரணங்களால் பல்வேறு சிக்கல் நிறைந்த சூழ்நிலைகள் எழுந்துள்ளது என்பது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. எனவே, நாடு முழுவதிலும் உள்ள கைத்தொழில்களுக்கு ஏற்ற வகையில் 50,000 ஏக்கர் காணிகளை ஒதுக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இதற்கு அமைய, இது தொடர்பில் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு, நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி விரைவில் எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் அடங்கிய அறிக்கையை வழங்குமாறு குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.
தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபணரங்கள் அதிகாரசபையின் தற்போதைய செயலாற்றுகை மற்றும் அதில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது. எதிர்காலத்தில் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை மற்றும் மாணிக்கக்கல் ஆபரண ஆராய்ச்சி பயிற்றுவிப்பு நிறுவனம் ஆகியவற்றை ஒன்நிணைக்கத் தீர்மானித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தற்போதைய செயல்திறன் குறித்தும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. நாட்டில் ஏற்றுமதியை அபிவிருத்தி செய்து அதனை மேம்படுத்துவதற்காக உள்ள ஒரேயொரு நிறுவனம் இது என்றும், ஆடைகள், தேயிலை, ரப்பர், வாசனைத் திரவியங்கள், தகவல் தொழில்நுட்பம், இரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் உள்ளிட்ட துறைகளின் ஏற்றுமதிகள் குறித்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நாட்டின் ஏற்றுமதியில் மிகப்பெரிய பங்கைக் கொண்ட அமெரிக்காவின் வரிக் கொள்கையை முறையாக நிர்வகிப்பதன் மூலம் நிலைமையை சமாளிக்க முடிந்திருப்பது ஒரு பெரிய சாதனை என்றும், 2023 ஆம் ஆண்டில் ஏறத்தாழ 15 பில்லியன் அமெரிக்க டொலர்களிலிருந்து 2028 ஆம் ஆண்டில் 28 பில்லியன் அமெரிக்க டொலர்களாக ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்கும் இலக்குடன் செயற்பட்டு வருவதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேசிய உப்பு நிறுவனத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் அதிக செயல்திறனுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். காலநிலை மாற்றத்தால், கடந்த காலங்களில் இயற்கை உப்பு உற்பத்தியில் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். அதன்படி, ஆனையிறவு பகுதியில் இயற்கை செயல்முறைக்குப் பதிலாக நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செயற்கையாக உப்பு உற்பத்தி செய்யும் உப்பு உற்பத்தித் தொழிற்சாலையை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவந்தது. இந்த ஆண்டுக்கான தேசிய உப்பு நிறுவனத்தினால் இலக்கு வைக்கப்பட்ட வருமானம் ரூபா 1 பில்லியன் என்றும், இது கடந்த ஆண்டை விட 50% அதிகரிப்பாக இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன், பி.சி.சி லங்கா லிமிடட் நிறுவனம் உயர் மட்டத்திலான தேங்காய் எண்ணெய்களை உற்பத்தி செய்துவரும் நிறுவனம் என்பதுடன், 192 வருடங்கள் பழமைவாய்ந்த இந்த நிறுவனத்திற்கு தரச்சான்றிதழ் பெற்றுக்கொள்ளப்படவில்லையென அதன் தற்போதைய தலைவர் குழுவில் குறிப்பிட்டார். இந்த சூழ்நிலையால் பல ஏற்றுமதி வாய்ப்புகள் இழக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி, SLS மற்றும் ISO உள்ளிட்ட தரச் சான்றிதழ்களைப் பெறுவதற்கான அவசர நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இக்குழுக் கூட்டத்தில் அதன் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், சட்டத்தரணி சட்டத்தரணி அநுராத ஜயரத்ன, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, கந்தசாமி பிரபு, விஜேசிரி பஸ்நாயக்க, சுரங்க ரத்நாயக்க, திலிண சமரகோன் ஆகியோரும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

