
FEB 17 ,முன்னாள் எம்.பி.க்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் குறித்த விவாதம்
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நிறுத்துவதற்கான ‘நாடாளுமன்ற ஓய்வூதியங்கள் (நீக்கல்) சட்டமூலம்’ தொடர்பான விவாதம் எதிர்வரும் பெப்ரவரி 17 ஆம் தேதி நடைபெறும் என சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
வாக்கெடுப்பு: குறித்த சட்டமூலம் விவாதிக்கப்படும் அதே தினத்திலேயே நாடாளுமன்றத்தில் சட்டமூலம் நிறைவேற்றப்படும் என சபை முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன அறிவித்துள்ளார்.
அத்துடன் அரசியலமைப்பின் 121(1) பிரிவின் கீழ், இந்த சட்டமூலத்தை ஒரு சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த சட்டமூலம் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும், இதனை நிறைவேற்ற விசேட பெரும்பான்மை மற்றும் மக்கள் தீர்ப்பு அவசியம் என்றும் கூறி முன்னாள் எம்.பி.க்கள் தாக்கல் செய்த மனுக்களைத் தொடர்ந்தே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் கடந்த ஜனவரி 7 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட இந்த சட்டமூலத்தின் பிரதான நோக்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய முறையை முழுமையாக ரத்து செய்வதாகும்.

