
இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க அருண் ஹேமச்சந்திர கொரியா விஜயம்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு, வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அருண் ஹேமச்சந்திர தலைமையிலான தூதுக்குழுவினர் இன்று (பெப்ரவரி 21) முதல் 28 ஆம் திகதி வரை தென்கொரியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விஜயத்தின் போது, தூதுக்குழுவினர் பின்வரும் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்:
கொரியாவின் மனிதவள மேம்பாட்டு சேவை (HRD Korea).
கொரியா சிறு மற்றும் நடுத்தர வணிக சம்மேளனம்.
தென்கொரிய வெளியுறவு அமைச்சு.
புசான் (Busan), தேகு (Daegu) மற்றும் அன்சான் (Ansan) ஆகிய நகரங்களில் உள்ள முன்னணி நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் மனிதவள மேலாளர்கள்.
: இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டை (Quotas) விரிவுபடுத்துதல் மற்றும் புதிய வாய்ப்புகளை உருவாக்குதல்,
வேலைவாய்ப்பு அனுமதி முறையின் (EPS) கீழ் கொரிய முதலாளிகளுக்கும் திறமையான இலங்கைத் தொழிலாளர்களுக்கும் இடையில் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்துதல்,
கொரியத் தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப இலங்கைப் பணியாளர்களின் பயிற்சி மற்றும் மொழித் திறனை சீரமைத்தல்,
அரசாங்கங்களுக்கு இடையிலான (G2G) பொறிமுறையின் ஊடாக ஆட்சேர்ப்பு செயல்முறையின் செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தல்,
பணியிடச் சூழலைப் புரிந்துகொள்வதற்கும் நீண்டகால வேலைவாய்ப்பு பங்களிப்புகளை ஊக்குவிப்பதற்கும் தொழிற்சாலைகளுக்கு நேரடியாகச் சென்று பார்வையிடல் ஆகியவை இந்த விஜயத்தின் நோக்கம் என கூறப்பட்டுள்ளது .
மேலும் சியோல் (Seoul) நகருக்கு வெளியே வசிக்கும் இலங்கையர்களுக்குத் தேவையான ஆவணங்கள் மற்றும் நலன்புரி சேவைகளை வழங்குவதற்காக சாங்வோன் (Changwon) நகரில் நடமாடும் தூதரக சேவை நடத்தப்படவுள்ளது.
சாங்வோன், தேகு மற்றும் வான்டோ (Wando) ஆகிய பகுதிகளில் வசிக்கும் இலங்கைத் தொழிலாளர்களை நேரடியாகச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறியவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

