
நிதி நெருக்கடியால் ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் சேவைகள் நிறுத்தம்
அமெரிக்காவின் ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் (Spirit Airlines) நிறுவனம், 34 ஆண்டுகள் சேவைக்குப் பிறகு திடீரென தனது செயல்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
உயர்ந்து வரும் விமான எரிபொருள் விலைகள் மற்றும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக, நிறுவனம் உடனடியாக சேவைகளை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
ஈரான் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களால் உருவான போர் நிலைமைகள், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தை பாதித்து, எரிபொருள் விலைகளை பெரிதும் உயர்த்தியுள்ளன. இதன் தாக்கமே இந்த முடிவிற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இருமுறை திவால் பாதுகாப்பு கோரி மனுத் தாக்கல் செய்திருந்த இந்த நிறுவனம், அரசின் நிதி உதவியைப் பெற முயன்றும் அது வெற்றியளிக்கவில்லை.
இதன் விளைவாக, சுமார் 17,000 பணியாளர்கள் தங்களது வேலைகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த திடீர் முடிவு, அமெரிக்க விமானப் போக்குவரத்து துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், உலக பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

