
போதைப்பொருளுடன் கைதான பிக்குகள் இன்று மீண்டும் நீதிமன்றில் ஆஜர்
தாய்லாந்திலிருந்து குஷ் மற்றும் ஹஷீஷ் ஆகிய போதைப்பொருட்களை இலங்கைக்குக் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 22 பிக்குகள் இன்று மீண்டும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி தாய்லாந்திலிருந்து வருகை தந்த இச்சந்தேக நபர்கள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 112 கிலோகிராம் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.
விசாரணைகளின் மூலம் இந்த கடத்தலை அமிதானந்த எனும் பிக்கு ஒருவரே வழிநடத்தியது அம்பலமாகியுள்ளது. அவர் கம்பஹா பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டார். குறித்த பிக்கு நாளை (3) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இந்த பிக்குவின் வழிகாட்டுதலில் முன்னரும் போதைப்பொருள் கடத்தல்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கண்டறிந்துள்ளனர். இதனுடன் தொடர்புடைய மற்றுமொரு நபர் அத்துருகிரிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் சந்தேக நபர்களை
7 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்த பின்னரே இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்துகின்றனர்.

