
எயார்பஸ் ஒப்பந்த விசாரணை ; மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோர் ஆணைக்குழுவில் ஆஜராக அழைப்பு
சர்ச்சைக்குரிய 2013ஆம் ஆண்டு எயார்பஸ் விமான கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன ஆகியோரை மே 12ஆம் திகதி வாக்குமூலம் அளிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அறிவித்துள்ளது.
2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் விமான சேவைக்காக 06 எயார்பஸ் A-330 மற்றும் 08 எயார்பஸ் A-350 ரக விமானங்களை கொள்வனவு செய்தபோது, 02 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலஞ்சமாக பெற்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டின் கீழ் அப்போதைய ஸ்ரீலங்கன் விமான சேவையின் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி நியோமாலி விஜேநாயக்க மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இவ்வழக்கு தொடர்பாக இலஞ்ச ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, சந்தேகநபரான கபில சந்திரசேன கடந்த மார்ச் 12ஆம் திகதி கைது செய்யப்பட்டு, பின்னர் மே 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

