
திரிவேணி சங்கமத்தில் 45 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடல்
உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ந்திகதி தொடங்கியது. பிப்ரவரி 26-ந்திகதி வரை 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது.
இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.
இந்நிலையில், இதுவரை 45 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் கும்பமேளாவிற்கு வருகை தந்து, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். இன்று காலை 10 மணி வரை 74.96 லட்சம் பேர் சங்கத்தில் நீராடினர் என உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது. மகா கும்பமேளாவுக்கு இந்த வருடம் சுமார் 55 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கும்பமேளாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், ராஜ்யசபா எம்.பி. சுதா மூர்த்தி மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நீராடினர்.
அதேபோல நடிகைகள் ஹேமமாலினி மற்றும் அனுபம் கெர், ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாய்னா நேவால், நடன இயக்குனர் ரெமோ டிசோசா உள்ளிட்ட பிரபலங்களும் புனித நீராடினர் எனபது குறிப்பிடத்தக்கது.
லட்சக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜ் நகரை நோக்கி படையெடுக்கும் நிலையில், சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சுமார் 300 கி.மீ தூரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக பக்தர்கள் கூறுகின்றனர். இதனால் கும்பமேளாவில் புனித நீராடுவதற்காக பிரயாக்ராஜ் நகரை அடைவதற்கு 3 நாட்கள் ஆகிறது என சில பக்தர்கள் கூறுகின்றனர்.