
பண்டிகைக் காலத்தில் விசேட உணவுப்பொதி வழங்கப்படும்
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக 5,000 ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பொதி 2,500 ரூபாவுக்கு வழங்கப்படும் என வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (19) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் , ”புத்தாண்டு காலத்தை முன்னிட்டு லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக அத்தியாவசிய உணவுப் பொதிகளை நிவாரண விலைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்காக வரவு – செலவுத் திட்டத்தில் 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவுகள் தொடர்பான குழுவின் பரிந்துரைகளுக்கமைய, இந்த ஒதுக்கீட்டை 1,500 மில்லியன் ரூபாவாக மாற்றியமைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
இதற்கான திருத்தம் இன்று (20) நிதியமைச்சின் குழுநிலை விவாதத்தில் முன்வைக்கப்படும். 17 இலட்சம் பேர் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு பெறுகிறார்கள்.
. 8,70,000 பேர் நலன்புரி கொடுப்பனவுக்குப் புதிதாக விண்ணப்பித்துள்ளார்கள். சதொச விற்பனை நிலையங்கள_டாக 5,000 ரூபா பெறுமதியான அத்தியாவசிய உணவுப்பொதி 2,500 ரூபாய் நிவாரண விலைக்கு வழங்கப்படும்.
இந்த நிவாரணப் பொதியில் நாடு அரிசி 05 கிலோ கிராம் , பெரிய வெங்காயம் 02 கிலோ கிராம், உருளைக்கிழங்கு 02 கிலோ கிராம், பருப்பு ஒரு கிலோ கிராம், டின் மீன் ஒன்று, சிவப்பு சீனி 03 கிலோ கிராம், கோதுமை மா 02 கிலோ கிராம், சமபோஷா 02 பெக்கட், 04 சோயா மீட் பெக்கட் உள்ளடக்கப்படும்.
நிவாரணப்பொதி வழங்குவதற்கு உரிய விநியோகஸ்தர்களிடமிருந்து விலைமனுக்கோரல் செய்யப்பட்டுள்ளது. திறைசேரியிடம் முற்பணம் கோரியுள்ளோம். இந்த நிவாரணப்பொதி வழங்கலில் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்காக புதிதாக விண்ணப்பித்துள்ள 8,70,000 பேருக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.” என தெரிவித்துள்ளார்.