
துருக்கியில் போராட்டம் ; 2 ஆயிரம் பேர் கைது
துருக்கியில் ஜனாதிபதியாக இருந்து வருபவர் ரெசெப் தையிப் எர்டோகன். இவருக்கு எதிராக கடந்த சில நாட்களாக துருக்கியின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வலுத்துள்ளது.
துருக்கியின் முக்கிய எதிர்க்கட்சி தலைவரும், அந்நாட்டின் மிகப்பெரிய நகரான இஸ்தான்புல்லின் மேயருமான எக்ரீம் இமாமோத்து மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இது தொடர்பாக அவர் கடந்த 19-ந்திகதி கைது செய்யப்பட்டார்.
துருக்கியில் 2028-ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சியை எதிர்த்து எக்கீம் இமாமோத்து போட்டியிட போவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியானதும் அவர் கைது செய்யப்பட்டார்.
அரசின் இந்த நடவடிக்கை எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொலிஸார் அவர்களை கண்ணீர் புகைகுண்டுகளை வீசி கலைத்தனர். இந்த போராட்டத்தின் போது ஒரு இடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரை விரட்டி சென்றனர். அதில் ஒருவர் பொம்மை வேடம் அணிந்து விரட்டினார். இந்த காட்சிகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
துருக்கியில் நடந்து வரும் போராட்டம் தொடர்பாக பொலிஸார் 2 ஆயிரம் பேரை கைது செய்துள்ளனர். ஏராளமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.