
12 நாட்டினருக்கு அமெரிக்காவுக்குள் நுழைய தடை
அமெரிக்க ஜனாதிபதி, டிரம்ப், அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி உள்ள வெளிநாட்டினரை வெளியேற்றும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறார்.
இந் நிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தலை காரணம் காட்டி 12 நாட்டு குடிமக்கள் அமெரிக்காவுக்கு வர தடை விதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான், மியான்மர் , சாட், காங்கோ, இகுவடோரியல் கினியா, எரித்ரியா, ஹைதி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான், வெனிசுலா ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் அமெரிக்காவிற்கு வர அதிக கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.
இந்த தடை உத்தரவு வருகிற 9-ந்திகதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார்.
இதுதொடர்பாக டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் பயணத் தடையை அறிவிக்கும் வீடியோவை வெளியிட்டார்.
அதில் அவர் கூறும்போது,
” கொலராடோவில் நடந்த சமீபத்திய தாக்குதல், முறையாக சரிபார்க்கப்படாமல் அமெரிக்காவிற்குள் நுழையும் வெளிநாட்டினரின் தீவிர ஆபத்துகளை விளக்குகிறது.
இதனால் பல நாடுகளுக்கு பயண கட்டுப்பாடுகளை விதிக்கும் புதிய நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டு உள்ளேன். வெளிநாட்டினர் நமது நாட்டிற்குள் நுழைந்து அமெரிக்கர்களுக்கு தீங்கு விளைவிப்பதை ஏற்க முடியாது என்றார்.

