
சூறாவளியால் துண்டிக்கப்பட்ட 85 சதவீத மின் இணைப்புகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன
நாட்டில் இடம்பெற்ற அனர்த்த சூழ்நிலை காரணமாக மின்சாரத்தை இழந்த சுமார் 3.9 மில்லியன் நுகர்வோரில் சுமார் 85% வீதமானோருக்கு தங்கள் இணைப்புகளை வழங்க முடிந்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் நோயல் பிரியந்த தெரிவித்தார்.
அனர்த்த செயல்பாட்டு ஊடக மையத்தில் நேற்று (04) விசேட அறிக்கை ஒன்றை வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாடு முழுவதும் சுமார் 7 மில்லியன் மின்சார நுகர்வோர் இருப்பதாகவும், அவர்களில் 3.9 மில்லியன் பேர் தங்கள் மின் இணைப்புகளை இழந்துள்ளதாகவும் அவர் கூறினார். அவர்களில் சுமார் 85% வீதமானோரிக்கு தற்போது தங்கள் மின் இணைப்புகளை வழங்க முடிந்துள்ளதாகவம் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இடம்பெற்ற அனர்த்த சூழ்நிலையில் 16,771 மின்மாற்றிகள் செயலிழந்துள்ளதாகவும், அவற்றில் 14,549 மீண்டும் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மீதமுள்ள செயலிழந்த இணைப்புகள் விரைவில் மீட்டெடுக்கப்படும் என்றும் தெரிவித்த அவர், இந்த செயல்பாட்டில் ஒரு மின்சார ஊழியர் உயிரிழந்துள்ளதாகவும், அது குறித்து தான் மிகவும் வருத்தமடைவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு

