
வறட்சியால் வற்றிப்போன பொல்கொல்ல நீர்த்தேக்கம்
கடந்த சில நாட்களாக மத்திய மலைநாட்டின் நீரேந்து பகுதிகளில் மழை வீழ்ச்சி இன்மையாக் பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் கணிசமாகக் குறைந்துள்ளது.
இதனால் நீர்த்தேக்கத்தின் உட்பகுதிகளில் மணல் திட்டுக்களும், ஆற்றுப் படுகைகளும் வெளியே தெரிகின்றன .
இந்நிலையில் எஞ்சியிருக்கும் ஒரு பகுதி நீரைக் கொண்டு மின்சார உற்பத்தியை (உகுவெல மின்நிலையம்) பராமரிப்பதற்காகவும், குடிநீர் தேவைகளுக்காகவும் நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் அனைத்தும் தற்போது மூடப்பட்டுள்ளன.
அண்மையில் வீசிய ‘டிட்வா’ (Ditwah) புயலின் போது ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் அடித்து வரப்பட்ட குப்பைகள் மற்றும் சேறுகள், தற்போது நீர் வற்றியுள்ள ஆற்றின் நடுவே குவிந்து காணப்படுவதை அவதானிக்க முடிகிறது.
பொல்கொல்ல நீர்த்தேக்கம் வறண்டு காணப்படுவதால், ஆற்றுப் படுகையில் உள்ள மணல் மற்றும் பாறைகளைப் பார்ப்பதற்காக பல சுற்றுலாப் பயணிகள் அங்கு வருகை தருகின்றனர்.
வழமையாக பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் குறையும் போது, அதன் அடியில் மூழ்கியிருக்கும் பழைய கட்டிடங்களின் எச்சங்கள் அல்லது மரங்கள் வெளியே தெரிவது வழக்கம் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர் .

