
தித்தவா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட அரநாயக்க – தோதல்தோய வரையான வீதி வெடித்து தாழிறங்கியது – மாற்று வீதியிலும் மண்சரிவு
தித்தவா புயலால் ,ஏற்கனவே மண்சரிவுக்குள்ளான அரநாயக்க பகுதியில் ,நேற்று முதல் பெய்து வரும் மழையால் மீண்டும் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.
அரநாயக்கவின் அம்பலகந்த, தோதல்தோய மற்றும் கந்துன ஆகிய பகுதிகளில் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
அரநாயக்க நகரில் இருந்து தோதல்தோய வரை செல்லும் பிரதான வீதியின் காபட் வீதியின் , அம்பலகந்த பகுதியில் நடுவே மிகவும் அபாயகரமான முறையில் வெடிப்பு ஏற்பட்டு தாழிறங்கியுள்ளது.
கடந்த நாட்களில் மண்சரிவு ஏற்பட்ட இந்த இடத்தில் உள்ள பிரதான கால்வாயின் மதகு முறையாகப் புனரமைக்கப்படாததுடன் , பிரதான வீதியின் ஊடாக நீர் பாய்ந்துச் சென்றதால் இவ்வாறு தாழிறங்கியதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் தோதல்தோய கிராமத்திற்கு வாகனங்களில் பிரவேசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், மாற்று வீதியான புவக்வத்த வீதியும் மண்மேடுகள் சரிந்து விழுந்து தடைப்பட்டுள்ளது.
அரநாயக்க பகுதியில் ‘டித்வா’ புயலுக்கு முன்னர் ஏற்பட்ட பயங்கர மண்சரிவில் 13 பேர் பலியானதுடன், 100-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றாகச் சேதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

