
அமெரிக்காவில் புதிய வகை கொரோனா
அமெரிக்காவில் புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்று வேகமாக உருமாற்றம் பெற்று பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
“பிஏ.3.2” என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் “சிகாடா” எனவும் அழைக்கப்படுகிறது.
இந்த புதிய மாற்றம் அதிக வேகத்தில் பரவுவதுடன், தொடர்ச்சியாக உருமாறும் பண்புகளையும் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், இதனை கட்டுப்படுத்தும் முயற்சிகள் உடனடி பலனை அளிக்கவில்லை என சுகாதார வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்ட தகவலின்படி, இந்த வைரஸ் 25 மாகாணங்களில் கண்டறியப்பட்டுள்ளதுடன், நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது.
2024 ஆம் ஆண்டு இறுதியில் தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட இந்த தொற்று, 2025 ஆம் ஆண்டில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2021 ஆம் ஆண்டு பரவலாக காணப்பட்ட ஒமைக்ரான் வகை வைரஸின் தொடர்ச்சியாகவே இது கருதப்படுகிறது. மேலும், இதன் புரத அமைப்பில் 70 முதல் 75 வரை உருமாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொதுமக்கள் மத்தியில் தொற்று அதிகரித்தாலும், உடனடி பெரிய அளவிலான அச்சுறுத்தல் இல்லை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், தற்போதுள்ள கொரோனா தடுப்பூசிகள் இந்த புதிய மாற்றத்திற்கு முழுமையான பாதுகாப்பை வழங்குவதில் சவால்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் நகரில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், பின்னர் உலகம் முழுவதும் பல அலைகளாக பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

