
கொழும்பு 07 இல் பக்கத்து வீட்டுப் பெண் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்த நபரை மே 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு
பக்கத்து வீட்டுப் பெண் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்து, அதனை அந்தப் பெண்ணின் நண்பர் ஒருவருக்கு அனுப்பியதாகக் கூறப்படும் நபரை மே 4 ஆம்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று உத்தரவிட்டார்.
மருதமுனைப் பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர், கொழும்பு 07 இல் வாடகைக்கு வசித்து வந்த இளம் பெண் ஒருவரால் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கறுவாத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கறுவாத்தோட்டம் பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த தகவல்களின்படி ,சந்தேகநபர் கொழும்பு 07 பகுதியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு அருகிலுள்ள வீட்டில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் தனது வீட்டின் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தபோது, சந்தேகநபர் தனது கைப்பேசியைப் பயன்படுத்தி அதனை ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார்.
பின்னர், அந்த வீடியோ காட்சிகளைப் பெண்ணின் நண்பர் ஒருவருக்கு அவர் அனுப்பியுள்ளார்.
குறித்த நண்பர் இது குறித்து அந்தப் பெண்ணிடம் தெரிவித்த பின்னரே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பெண், சந்தேகநபரின் வீட்டிற்குச் சென்று அவரை நேரில் சந்தித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கடுமையாகத் திட்டியதுடன் அவரது கைப்பேசியையும் அடித்து உடைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
பொலிஸார் சந்தேகநபரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதவான், உண்மைகளைக் கருத்திற்கொண்டு சந்தேகநபரை மே 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

