
மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முயிசுஇன்று நாட்டிற்கு வருகை
மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முயிசு (Mohamed Muizzu) அவர்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (03) இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
2023 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர், மொஹமட் முயிசு அவர்கள் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் நாட்டிற்கு வருகை தரும் மாலைத்தீவு ஜனாதிபதி, எதிர்வரும் 06 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்.
இந்த விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் 06 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் இந்த விஜயத்தின் போது கையெழுத்திடப்பட உள்ளன.
மாலைத்தீவு ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு இன்று (03) முதல் எதிர்வரும் 06 ஆம் திகதி வரை கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

