
கல்கமுவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வரப்பட்ட கைதி தப்பியோட்டம் – உடன் கைவிலங்கிடப்பட்ட கைதியின் காலில் துப்பாக்கிச் சூடு
கல்கமுவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட போது, பொலிஸ் காவலிலிருந்து தப்பியோட முயன்ற சந்தேகநபர் ஒருவர் மீது பொலிஸார் இன்று (03) மதியம் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்ட பல சந்தேகநபர்களை பொலிஸ் நிலையத்திலிருந்த ஜீப் வண்டியில் ஏற்ற முற்பட்ட போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஒன்றாகக் கைவிலங்கு போடப்பட்டிருந்த இருவர், பொலிஸ் நிலையத்தின் நுழைவாயிலிலிருந்து சுமார் 75 மீட்டர் தூரம் வரை ஓடித் தப்பியோட முயன்றுள்ளனர்.
இதன்போது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு சந்தேகநபரின் முழங்காலுக்குக் கீழ் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.
அவர் உடனடியாக கல்கமுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் கல்கமுவ, கோஜராகம பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபராவார். அவர் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் வேண்டாம் எனக் கூறியும் உடன் கைவிலங்கிடப்பட்டு நீமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கைதி தப்பிச்செல்ல முயற்சித்ததாக துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான கைதியின் மனைவி தெரிவித்துள்ளார்.

