
அமெரிக்கா முன்வைத்த போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கானவரைவுத் திட்டத்திற்கு பதில் வழங்கிய ஈரான் -போர் முடிவிற்கும் வரும் சாத்தியம்
அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கான வரைவுத் திட்டத்திற்கு ஈரான் தனது பதிலை வழங்கியுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தானிய மத்தியஸ்தர் ஒருவரின் ஊடாக இந்த பதில் அமெரிக்காவிடம் இன்று ஒப்படைக்கப்பட்டதாக ஈரானின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான IRNA தெரிவித்துள்ளது.
முன்மொழியப்பட்ட கட்டமைப்பின்படி, பிராந்தியத்தில் நிலவும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதே இந்த கட்டப் பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கமாக இருக்கும்.
ஈரானின் பதில் குறித்த விரிவான விபரங்கள் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை.
ஈரானின் புதிய உயர் தலைவர் மொஜ்தபா கொமேனி (Mojtaba Khamenei) மற்றும் சிரேஷ்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் அப்துல்லாஹி ஆகியோருக்கு இடையே விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
எந்தவொரு எதிரி நாட்டுத் தாக்குதலையும் எதிர்கொள்ள ஈரான் இராணுவம் நவீன ஆயுதங்களுடன் தயார் நிலையில் இருப்பதாக தளபதி அப்துல்லாஹி இதன்போது தெரிவித்துள்ளார்.
மேலும், மூலோபாய ரீதியான தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கு மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
புதிய உச்ச தலைவர் குறித்த மர்மம்:
கடந்த மார்ச் மாதம் தனது தந்தை அயதுல்லா அலி கொமேனியின் மறைவுக்குப் பிறகு மொஜ்தபா கொமேனி பதவிக்கு வந்தார்.
எனினும், இதுவரை அவரது புகைப்படமோ அல்லது வீடியோவோ அரச ஊடகங்களில் வெளியிடப்படவில்லை.
இதனால் அவரது ஆரோக்கியம் மற்றும் அவர் இருக்கும் இடம் குறித்து சர்வதேச அளவில் சந்தேகங்கள் எழுந்துள்ளன.
ஆயினும், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் தான் அண்மையில் உச்ச தலைவருடன் இரண்டரை மணிநேரம் கலந்துரையாடியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க உளவுத்துறை தகவல்களின்படி, ஈரான் ஆட்சிக்குள் சில உள்நாட்டுப் பிரிவினைகள் நிலவினாலும், போர் வியூகங்களை வகுப்பதிலும் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை கையாள்வதிலும் மொஜ்தபா கொமேனி தீர்க்கமான முடிவுகளை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

