
இலங்கை – பெலாரஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், உத்தியோகபூர்வ விஜயமாக தற்போது பெலாரஸ் குடியரசிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, பெலாரஸின் தலைநகர் மின்ஸ்கில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் மாக்சிம் ரிஜென்கோவ் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் அவர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
இந்த கலந்துரையாடல்களில் இலங்கையின் சார்பில், ரஷ்ய சம்மேளனத்திற்கான இலங்கையின் நியமனத் தூதுவர் ஷோபினி குணசேகர, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிற்கான பணிப்பாளர் நாயகம் சுகீஷ்வர குணரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் பின்னர், இலங்கை மற்றும் பெலாரஸ் வெளிவிவகார அமைச்சர்கள் இணைந்து கூட்டு அறிக்கையொன்றையும் வெளியிட்டனர்.
அந்த அறிக்கையில், பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான பரஸ்பர அர்ப்பணிப்பு வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஒரு தசாப்தத்திற்கும் மேலான கால இடைவெளிக்குப் பிறகு, இலங்கையிலிருந்து பெலாரஸிற்கு மேற்கொள்ளப்பட்ட முதல் உயர்மட்ட விஜயமாக இந்தப் பயணம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயம், இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளில் புதிய முன்னேற்றத்தையும் புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதன்போது, இருநாடுகளுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டுள்ளன.
இந்த ஒப்பந்தங்கள் எதிர்காலத்தில் இலங்கை மற்றும் பெலாரஸ் நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்புகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான வலுவான அடித்தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

