
இன்றுமுதல் இலங்கையில் PayPal மூலம் பணத்தை பெறவும் அனுப்பவும் கூடியவகையில் சேவை ஆரம்பம்
இலங்கையில் பேபால் சேவையை விரிவுபடுத்தும் உத்தியோகபூர்வ அறிவிப்பு,பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் கொழும்பு Galle Face ஹோட்டலில் நடைபெற்றது.
இதுவரை காலமும் இலங்கையில் பேபால் கணக்குகள் “பணம் அனுப்புவதற்கு மாத்திரம்” வரையறுக்கப்பட்டிருந்தன. இதனால் இலங்கையர்களால் வெளிநாடுகளுக்கு பணம் செலுத்த முடிந்ததே தவிர, சர்வதேச வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தை நாட்டுக்கு பெற்றுக்கொள்ள முடியாமல் இருந்தது.
இந்தப் புதிய விரிவாக்கத்தின் மூலம், இணையவழியில் பணியாற்றும் சுயாதீன பணியாளர்கள் மற்றும் சிறு, நடுத்தர அளவிலான வர்த்தகர்கள் தங்களது வருமானத்தை நேரடியாக இலங்கை வங்கிக் கணக்குகளுக்குப் பெற்றுக்கொள்ள முடியும்.
இதன் மூலம் நாட்டுக்குக் கிடைக்கும் உத்தியோகபூர்வ வெளிநாட்டுச் செலாவணியும் அதிகரிக்கும்.
சுமார் 12 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த பேச்சுவார்த்தைகள், தாமதங்கள் மற்றும் தொடர்ச்சியான முயற்சிகளுக்குப் பிறகு இந்த முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது.
இது இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரம், தகவல் தொழில்நுட்பத் துறை, புத்தாக்க முயற்சிகள் மற்றும் மின்-வணிகம் (E-commerce) துறைகளில் ஒரு பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆரம்ப கட்டமாக பின்வரும் வங்கிகள் ஊடாக பேபால் சேவைகள் இலங்கையில் செயற்படுத்தப்படும்,
இலங்கை வங்கி (Bank of Ceylon)
கொமர்ஷல் வங்கி (Commercial Bank)
சம்பத் வங்கி (Sampath Bank)
எதிர்காலத்தில் ஏனைய வங்கிகளும் இந்தச் சேவையுடன் இணைந்துகொள்ளவுள்ளன.

