
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 14 கோடி ரூபா பெறுமதியுள்ள போதைப்பொருளுடன் இருவர் கைது
14 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய “குஷ்” ரக போதைப்பொருளுடன் இலங்கை நாட்டைச் சேர்ந்த இரு விமானப் பயணிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இன்று (18) காலை 9.30 மணிக்கு பெங்கொக் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் இருவரும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
சோதனைக்காக அவர்களின் பயணப் பொதிகள் பரிசோதிக்கப்பட்டபோது, அவற்றுக்குள் ஆடைகளுக்கிடையில் நுணுக்கமாக 28 பொதிகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 14 கிலோ 562 கிராம் “குஷ்” ரக உயர் தர போதைப்பொருள் கண்டறியப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவர் 23 வயதான மதுபானசாலை ஊழியர்; மற்றையவர் 30 வயதான கூலித் தொழிலாளி என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக, இருவரும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

