
கனமழையால் அத்தனகலு ஓயா ஆற்றங்கரை பகுதி மக்களுக்கு அவசர எச்சரிக்கை – 250 mm மழைவீழ்ச்சி பதிவு
தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அத்தனகலு ஓயா ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து சிறிய அளவிலான வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று (மே 21) இரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக பல நதிப் பள்ளத்தாக்குகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.
தூனமலே நீர் அளவீட்டு மையத்தின் தரவுகளின்படி,
தற்போது 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அத்துடன், ஆற்றின் மேல்மடிப் பகுதிகளில் சில இடங்களில் 250 மில்லிமீட்டரைத் தாண்டிய மழை பதிவாகியுள்ளது.
இந்த நிலைமையால் கம்பஹா , கந்தானை மற்றும் வத்தளை ஆகிய தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரிவள மற்றும் அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர், பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
சில பகுதிகளில் 200 மில்லிமீட்டர் முதல் 300 மில்லிமீட்டர் வரை மிக அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதால், நிலவும் வானிலை மற்றும் வெள்ள நிலைமைகள் குறித்து பொதுமக்கள் தொடர்ந்து அவதானமாக இருக்குமாறும், இது குறித்த மேலதிக விபரங்கள் தொடர்ந்து அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

