
புதைகுழிகளுக்கு பொறுப்புக் கூறவேண்டியவர்களே நீதி வேண்டும் என போராடுகின்றனர்
வடக்கு கிழக்கில் இருக்கும் புதைகுழிகளுக்கு பொறுப்புக் கூறவேண்டியவர்களே இன்று தமிழ் தேசிய பரப்பின் உரித்தாளர்கள் எனக் கூறி கூட்டமைத்து போராடுகின்றனர். இது தமிழ் மக்களின் சாபக்கேடு என சட்டத்தரணி வி.மணிவண்ணன் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று(26) ஊடக சந்திப்பை மேற்கொண்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ”தமிழ் மக்கள் கூட்டணிக்கு அழைப்பு விடுக்காமையானது தேசியப் பரப்பில் பயணிப்பவர்கள் என்று கூறி எதிர்வரும் 29 ஆம் திகதியன்று கையெழுத்து போராட்டம் மேற்கொள்ள முயற்சிப்பவர்களின் தேசியக் கொள்ளைக்கு எமது நிலைப்பாடு ஒத்துவராதென நினைத்திருக்கலாம். அவர்கள் கூட்டு என்ற போர்வையில் எதை சாதிக்க முயல்கின்றார்கள் என தெரியவில்லை.
நேற்றையதினம் கூடிய கூட்டுக்குள் பல கட்சிகளின் பிரதிநிதிகள் இராணுவத்துடன் இணைந்து ஒட்டுக்குழுவாக பல்வேறு மோசமான செயற்பாடுகளை செய்தவர்கள் என்பதை மக்கள் அறிவர்.
அதன்படி இதில் உள்ள அவர்களில் சிலர் செம்மணி உள்ளிட்ட பல கொலைகளுக்கு பொறுப்புக் கூறவேண்டியவர்களாகவும் இருக்கும் நிலை உருவாகலாம்.
எனவே இவர்கள் முன்னெடுக்கும் இந்த போராட்டம் எந்தளவு வெளிப்படையானதாகவும் உணர்வூர்வமானதாகவும் இருக்கும் என்பது தெரியாது.
இதேவேளை குறித்த போராட்டத்தை முன்னெடுக்கும் தலைவர்கள் உண்மையானவர்களாக இல்லாது போனாலும் போராட்டம் அவசியமானது. அந்தவகையில் போராட்டத்தின் வலுவாக்கலுக்கு எமது கட்சியின் ஆதரவு என்றும் இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
பிரதீபன்

