
ஜன நாயகன் தணிக்கை சான்று விவகாரம் ; தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றம்
நடிகர் விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ திரைப்படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி தீர்ப்புக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இவ்வழக்கில் தீர்ப்பளித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, ‘ஜன நாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்வதாக அறிவித்ததுடன், வழக்கை மீண்டும் தனி நீதிபதியின் விசாரணைக்குப் பிறப்பித்துள்ளது.
இதற்கமைய, இரு நீதிபதிகள் அமர்வின் உத்தரவின் அடிப்படையில், நீதிபதி ஆஷா இவ்வழக்கை மீண்டும் விசாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனி நீதிபதி தீர்ப்புக்கு எதிராக தணிக்கை வாரியம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து இத்தீர்ப்பை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

