
விமான விபத்தில் மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழப்பு
இந்தியாவின் மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜித் பவார், இன்று (28) காலை இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் பயணித்த விமானம், இன்று காலை பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்ட வேளையில் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசர தரையிறக்கம் மேற்கொள்ள முயன்றபோது, விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணைகள் சுட்டிக்காட்டுகின்றன.
விபத்தைத் தொடர்ந்து தீயணைப்புப் படையினர் மற்றும் மீட்புக் குழுவினர் தீவிர மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், அஜித் பவார் உட்பட விமானத்தில் பயணித்த விமானிகள் மற்றும் உதவியாளர்கள் என மொத்தம் நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
துணை முதலமைச்சர் அஜித் பவாரின் திடீர் மறைவு மகாராஷ்டிர அரசியல் களத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், இந்தியப் பிரதமர் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் தேசிய, மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் தமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

