
சட்டத்தரணி கொலையின் முக்கிய சந்தேக நபரான பத்தேகம இராணுவ சிப்பாய் இன்று நீதிமாற்றத்தில் ஆஜர்
அக்குரேகொட இரட்டைக்கொலை சம்பவம் தொடர்பில் நேற்று (21) கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி குறித்து பல தகவல்களை பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 46 வயதுடைய பத்தேகம பகுதியைச் சேர்ந்தவர்.
இவர் ஒரு முன்னாள் இராணுவ சிப்பாய் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
2009ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தின் போது அவர் இராணுவத்தில் இருந்து சட்டப்பூர்வமாக விலகியுள்ளார்.
மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று அம்பலாங்கொட, தெல்தூவ பகுதியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டார்.
இதன்போது குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட கைபேசி ஒன்றும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டது.
கடந்த பெப்ரவரி 13ஆம் திகதி அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
இந்தக் கொலைச் சம்பவத்திற்கு உதவி வழங்கியமை மற்றும் சதித் திட்டம் தீட்டியமை தொடர்பில் கடந்த 16 மற்றும் 17ஆம் திகதிகளில் கொட்டாவ, அத்துருகிரிய மற்றும் கஹதுடுவ பகுதிகளில் ஏற்கனவே மூவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட முக்கிய துப்பாக்கிதாரி இன்று (பெப்ரவரி 22) கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

