
டெல்லியில் பெரும் தீ விபத்து ; 400 குடிசை வீடுகள் எரிந்து நாசம்
டெல்லி நகரின் உத்தம் நகர் பகுதியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 300 முதல் 400 வரையான குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளன.
நேற்று (11) இரவு மட்டியாலா கிராமத்தில் அமைந்துள்ள மீன் சந்தையில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வியாபாரிகள் தங்கள் தினசரி வியாபாரத்தை முடித்துக் கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட இந்த தீ, அருகிலிருந்த குடிசை வீடுகளுக்கு வேகமாக பரவியதாக கூறப்படுகிறது.
டெல்லி தீயணைப்பு சேவை தெரிவித்ததாவது, 23 தீயணைப்பு வண்டிகள் ஈடுபடுத்தப்பட்ட பல மணி நேர நடவடிக்கைக்குப் பிறகு இன்று (12) அதிகாலை தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்களது வீடுகளையும் வணிகங்களையும் இழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

