
உலகை ஆள வேண்டும் என்ற ஒரு தனி நபரின் பேராசையால் உலக அமைதி கடுமையாக சீர்குலைந்துள்ளது
உலகை ஆள வேண்டும் என்ற ஒரு தனி நபரின் பேராசையால், உலக அமைதி தற்போது கடுமையாகச் சீர்குலைந்துள்ளதாகவும், ஒட்டுமொத்த மனிதகுலமும் துன்பப்படுவதாகவும் கர்தினால் மால்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறன்று நடைபெற்ற பிரதான திருப்பலியில் உரையாற்றிய அவர், கிறிஸ்தவத்தின் உண்மையான அர்த்தத்தை எடுத்துரைத்தார்.
“இந்த நேரத்தில் நாம் அனைவரும் உலக அமைதிக்காகப் பிரார்த்திக்க வேண்டும். ஒரு தனி நபரின் சுயநல ஆசையால் உலக அமைதி பாதிக்கப்பட்டுள்ளது. அதன் விளைவுகளை மனிதகுலமே அனுபவித்து வருகிறது. அந்த நபரின் மனம் மாறி, தவறான பாதையிலிருந்து விலக வேண்டும்,” என்று அவர் கூறினார்.
மேலும், கிறிஸ்தவம் என்பது வெறும் பிரார்த்தனை செய்வது அல்லது பைபிளை வாசிப்பது மட்டுமல்ல என்றும் அவர் வலியுறுத்தினார். “கிறிஸ்தவம் என்பது அன்பு மற்றும் சேவையை அடிப்படையாகக் கொண்ட ஒரு வாழ்க்கை முறையாகும். ஒரு உண்மையான தலைவர் ஒரு சேவகராக இருக்க வேண்டும். ஆனால் இன்றைய உலகில், தலைவர்கள் அதிகாரத்தின் பின்னால் ஓடுகிறார்கள்,” என்று கர்தினால் மால்கம் ரஞ்சித் கூறினார்.

