“சமூக சக்தி” தேசிய வேலைத்திட்டத்தின் செயற்பாட்டுக் குழு கூடியது

“சமூக சக்தி” தேசிய வேலைத்திட்டத்தின் செயற்பாட்டுக் குழு கூடியது

சமூகத்தை வலுப்படுத்துவதற்கும், பொருளாதார நன்மைகள் சமூகத்திற்குள் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுவதை உறுதி செய்வதற்கும் தற்போதைய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் “சமூக சக்தி” தேசிய வேலைத்திட்டத்தின் செயற்பாட்டுக் குழுவின் மூன்றாவது கூட்டம், கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகேவின் தலைமையில் இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் நேரடி மற்றும் ஓன்லைன் ஆகிய இருவழி முறைகளின் ஊடாக நடைபெற்றது.

சமூக சக்தி தேசிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட சுற்றறிக்கைக்கு செயற்பாட்டுக் குழுவின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வது மற்றும் சமூக சக்தி வறுமை ஒழிப்பு தேசிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாட்டு அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டி வரைபுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

சமூக சக்தி வேலைத்திட்டம் தொடர்பாக அரச உத்தியோகத்தர்களுக்கான பயிற்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் மற்றும் அதன் செயற்திட்டம், அதேபோல் சமூக அபிவிருத்தி சபைகளை நிறுவுதல் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

சமூக சக்தி தொடர்பாடல் மற்றும் ஊக்குவிப்புத் திட்டம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன்,சமூக சக்தி வேலைத்திட்டம் நாட்டிற்குள் நடைமுறைப்படுத்தப்படுவதும், தொடர்பாடல் ஊக்குவிப்பு நடவடிக்கைகளும் சிறந்த ஒருங்கிணைப்புடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது. இதற்காகத் தயாரிக்கப்பட்ட ஐந்து அம்ச அணுகுமுறைகளைக் கொண்ட தொடர்பாடல் ஊக்குவிப்புத் திட்டத்திற்கு சமூக சக்தி செயற்பாட்டுக் குழு அங்கீகாரம் வழங்கியது.

சமூக சக்தி தேசிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான ஊழியர்களை இணைத்துக்கொள்வது மற்றும் ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவிற்கும் ஒரு வலுவூட்டல் உத்தியோகத்தரை நியமிப்பதற்கும், தற்போது அரச சேவையில் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களை கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சிற்கு இணைத்துக்கொள்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

2027 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி முன்மொழிவுகளை நேரடியாக சம்பந்தப்பட்ட அமைச்சுகள், மாகாண சபைகள் மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கு அனுப்புவதற்கு அங்கீகாரம் பெறுதல், பல்வேறு அமைச்சுகள் மற்றும் மாகாண சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களைக் கண்காணிப்பதற்குச் சமூக அபிவிருத்தி சபையின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளுதல், 2026 பிரஜாசக்தி ஆண்டுத் திட்டத்திற்குச் செயற்பாட்டுக் குழுவின் அங்கீகாரத்தைப் பெறுதல் உள்ளிட்ட சமூக சக்தி திட்டம் தொடர்பான பல முக்கிய விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, சமூக சக்தி செயற்பாட்டுக் குழுவின் அழைப்பாளர் மற்றும் செயலாளரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளருமான கபில ஜனக்க பண்டார, கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரினாயக்க, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார, வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் எல். பி. குமுது லால், தொழில் அமைச்சின் செயலாளர் எஸ். எம். பியதிஸ்ஸ, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் கபில பெரேரா, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எம்.டி.டி. விக்ரமசிங்க உள்ளிட்ட சமூக சக்தி செயற்பாட்டுக் குழு உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். அக்குழுவின் உறுப்பினர்களான மாகாண சபைகளின் செயலாளர்கள் ஓன்லைன் ஊடாக இதில் இணைந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )