
செம்மணி மனித புதைகுழி ; மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று (27) யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, மொத்தம் 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவற்றில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அப்பகுதியில் கூடுதல் எலும்புக்கூடுகள் இருப்பதாக சந்தேகம் நிலவியதால், மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுக்க 08 வார கால அவகாசம் தேவையென சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, நீதிமன்றம் அகழ்வு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கியது.
இந்நிலையில், பருவமழை மற்றும் காலநிலை சீரின்மை காரணமாக அகழ்வு பணிகள் முன்னெடுக்க முடியாமல் தாமதமானதுடன், புதைகுழி மழைநீரால் நிரம்பியிருந்தது.
இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 45 நாட்கள் நீடித்து, கடந்த செப்டெம்பர் 06ஆம் திகதியுடன் நிறைவடைந்திருந்த நிலையில், சுமார் 08 மாத இடைவெளிக்குப் பிறகு மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக 2 கோடியே 10 இலட்சம் ரூபாய் நிதி நிதியமைச்சினால் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதீபன்

