
கபிலவுக்கு பிணை வழங்கியவர்கள் குறித்து சந்தேகம் – நீதிமன்ற வளாகத்தில் உள்ள CCTV கேமராக்களை ஆய்வு செய்யுங்கள் – சாகர
ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் சந்தேகத்திற்குரியது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பிணை வழங்கியவர்கள் யார்?: கபில சந்திரசேனவுக்கு பிணை வழங்க முன்வந்த நபர்கள் குறித்து பெரும் சந்தேகம் நிலவுகிறது. விளக்கமறியலில் இருந்த ஒருவருக்கு இந்த பிணையாளர்களை கண்டுபிடித்துக் கொடுத்தது யார் என்பது குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.
பிணையாளர்களை வழங்கியதும் இந்த விவகாரத்தில் ஒரு சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என சாகர காரியவசம் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
நீதிமன்ற வளாகத்தில் உள்ள CCTV கேமராக்களை ஆய்வு செய்வதன் மூலம் பிணையாளர்களை அறிமுகப்படுத்தியது யார் என்பதை கண்டறிய முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.
பிணையாளர்களை கபில சந்திரசேனவுக்கு அறிமுகப்படுத்தியது சிறைச்சாலை அதிகாரிகளா அல்லது லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளா என்பது குறித்து நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
போலி பிணையாளர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதன் மூலம், கபில சந்திரசேனவை மீண்டும் நீண்ட காலத்திற்கு விளக்கமறியலில் வைப்பதற்கான சூழல் உருவாக்கப்பட்டதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த நடைமுறை மற்றும் பிணையாளர்களை வழங்கிய விதம் குறித்து கௌரவ நீதிமன்றம் உடனடியாக விரிவான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என சாகர காரியவசம் வலியுறுத்தியுள்ளார்.

