
வீர தீர சூரன் படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது
‘சேதுபதி, சித்தா’ படங்களை இயக்கிய இயக்குனர் சு.அருண்குமார் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் ‘வீர தீர சூரன்’. விக்ரமின் 62-வது படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷாரா விஜயன், சித்திக் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
‘வீர தீர சூரன்’ திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளதை படக்குழு உறுதி செய்துள்ளது. முதலில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது.
இப்படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு, முதல் பாகம் உருவாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் விக்ரம் கிராமிய தோற்றத்தில் ‘காளி’ என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இப்படத்தின் திரையரங்க விநியோக உரிமையை 5 ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் ‘கல்லூரும் காத்து என் மேல’ என்ற பாடல் வெளியாகி வைரலானது.
இந் நிலையில், ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் 2-வது பாடலான ‘ஆத்தி அடி ஆத்தி’ என்ற பாடல் தற்போது வெளியாகி உள்ளது.
பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள இந்த பாடலை ஜி.வி. பிரகாஷ் குமார், சாதிகா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.