
ஜனாதிபதி இன்று நாட்டை வந்தடைந்தார்வியட்நாம் விஜயம் வெற்றிகரமாக நிறைவு
வியட்நாமிற்கான தனது மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்த , ஜனாதிபதி இன்று
நாட்டை வந்தடைந்தார்.
வியட்நாம் அரசாங்கத்தின் சிறப்பு விமானம் மூலம் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக இன்று பிற்பகல் நாட்டிற்கு வருகை தந்தார்.
வியட்நாம் ஜனாதிபதி லுவாங் குவோங்கின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
இதன்போது , ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வியட்நாம் ஜனாதிபதியுடன் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதுடன், பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து வியட்நாம் அரச தலைவர்களுடன் விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டோ லாமுடனும் ஜனாதிபதி கலந்துரையாடினார்.
கடந்த 55 ஆண்டுகளில் உயர்ந்த அரசியல் நம்பிக்கை, நெருக்கமான மக்கள்-மக்கள் உறவுகள் மற்றும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட பாரம்பரிய நட்பு மற்றும் பன்முக ஒத்துழைப்பின் வளர்ச்சியை இரு நாடுகளும் வலியுறுத்தின.
இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய நட்பையும், வலுவான ஒத்துழைப்பையும் எதிர்காலத்தில் தேசிய வளர்ச்சியில் இன்னும் வலுவாகப் பேணுவதற்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
இதேவேளை , வியட்நாம் போர் வீரர்கள் நினைவுச்சின்னம் மற்றும் சுதந்திரப் போராட்டத் தலைவரும் சுதந்திர வியட்நாமின் முதல் ஜனாதிபதியுமான ஹோ சி மின் சமாதியில் ஜனாதிபதி மலர் அஞ்சலி செலுத்தினார்.
இந்த அரசு முறைப் பயணத்தின் போது, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க,Vingroup, Sun group, FPT Corporation. SOVICO,ROX ஆகிய வியட்நாமின் பாரிய வணிக நிறுவனங்களுடன் பல கலந்துரையாடல்களிலும் பங்கேற்றார் .
இதேவேளை ,தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய பௌத்த விஹாரைகளில் ஒன்றான பாய் டிங் (Bai Dinh) விகாரையின் புதிய போதி மதிலையும் ஜனாதிபதி திறந்து வைத்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தின கொண்டாட்டத்தில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட ஜனாதிபதி, சிறப்புரையாற்றியதன் மூலம், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பௌத்த உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்தும் இந்த விஜயத்தில் இணைந்தார்.

