
நுளம்பு முட்டைகளுடன் கூடிய 4,000 இடங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
கடந்த 16 நாட்களுக்குள் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்ட விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் போது, 30,000க்கும் மேற்பட்ட நுளம்பு இனப்பெருக்கம் ஏற்படக்கூடிய இடங்கள் இனங்காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
விசேட நுளம்பு ஒழிப்பு வாரத்தின் போது, 128,824 வளாகங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், இதன்போது 31,145 நுளம்பு இனப்பெருக்கம் ஏற்படக்கூடிய இடங்கள் இனங்காணப்பட்டதாக அமைச்சு குறிப்பிட்டது.
நுளம்பு முட்டைகள் உள்ள 6,777 வளாகங்கள் இதன்போது இனங்காணப்பட்ட நிலையல், மேலும் நுளம்பு இனப்பெருக்கத்திற்கு ஏற்றவாறு பராமரிக்கப்பட்ட 3,916 இடங்களுக்கு சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
அதேபோல், மேலும் 4,000 இடங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
தென்மேற்கு பருவமழை ஆரம்பித்துள்ள நிலையில், எதிர்காலத்தில் டெங்கு நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், இது குறித்து கவனம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

