
செம்மணி மனித புதைகுழி ; பொம்மை மற்றும் சப்பாத்து கண்டுபிடிப்பு
செம்மணி, சித்துப்பாத்தி இந்து மயானத்தின் மனித புதைகுழியின் அகழ்வுப் பணியின் இரண்டாம் கட்டத்தின் ஆறாவது நாள் அகழ்வுப் பணிகள் நேற்று (01) முன்னெடுக்கப்பட்டன.
நீல நிறப் பையுடன் காணப்பட்ட சிறிய பிள்ளையினுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் மனித எலும்புக்கூடு முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
இந்த எலும்புக்கூட்டுடன் சேர்த்து காலணி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில், புதைகுழி அகழ்வுப் பணிகளை மேற்பார்வை செய்யும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
ஏற்கனவே பாடசாலை பையுடன் அடையாளப்படுத்தப்பட்டிருந்த எலும்புக்கூடு இன்று முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த அகழ்வின்போது சிறு குழந்தையுடையது என கருதப்படும் ஒரு சப்பாத்தும், குழந்தைகள் விளையாடும் பொம்மை ஒன்றும் எடுக்கப்பட்டுள்ளது.


மேலும் ஐந்து எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனை ஐந்து எலும்புக்கூடுகள் என உறுதியாக குறிப்பிட முடியாது.
இதற்கமைய இதுவரை குறைந்தது 38 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
பிரதீபன்

