
டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த ஜோ ரூட்
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 387 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.
பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ஜெய்ஸ்வால் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆர்ச்சர் பந்தில் ப்ரூக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து கே.எல். ராகுல் உடன் கருண் நாயர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. கே.எல். ராகுல் நிதானமாக விளையாட, கருண் நாயர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
21ஆவது ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசினார். இந்த ஓவரின் 2ஆவது பந்து கருண் நாயரின் பேட்டில் உரசி கீப்பருக்கும், முதல் ஸ்லிப்பிற்கு இடையில் சென்றது. இதை முதல் ஸ்லிப்பில் நின்ற ஜோ ரூட் இடது கையால் அபாரமாக கேட்ச் பிடித்தார்.
இந்த கேட்ச் அவருடைய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 211ஆவது கேட்ச் ஆகும். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்த பீல்டர் (கீப்பர் அல்லாத வீரர்) என்ற சாதனையை படைத்துள்ளார்.

