
பொரளை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு நால்வர் வைத்தியசாலையில்
பொரளை, சஹஸ்புராவில் உள்ள சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு அருகில் நேற்று இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
களனியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
நேற்று இரவு இடம்பெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த 5 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார் .
கொழும்பு 9 ஐச் சேர்ந்த 21, 22 மற்றும் 23 வயதுடைய நால்வர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று நடைபெறவுள்ள கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தவர்களை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதிக்கு ஸ்கூட்டரில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டுக்கு T-56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சுமார் 20 தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது விளையாட்டு மைதான கேட்போர் கூட கட்டடத்தின் கதவு ஜன்னல் மற்றும் சுவருக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஐவரும் ஆண்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லையென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

