
கிராண்ட்பாஸ் மற்றும் பஞ்சிகாவத்தையில்2 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்ஒருவர் உயிரிழப்பு ஒருவர் தீவிர சிகிச்சைப்பிரிவில்
கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்று இரவு 11.45 அளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மஹாவத்த மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
களனியைச் சேர்ந்த 26 வயதுடைய நபரே இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு ரிவால்வர் வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் கண்டறியப்படவில்லையெனவும் போலீசார் தெரிவித்தனர்.
இதேவேளை , மருதானை பஞ்சிகாவத்தை வீதியில் உள்ள ஒரு தனியார் வங்கியின் முன் இன்று அதிகாலை 1.40 அளவில் மற்றொரு துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.
காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகக் தெரிவிக்கப்படுகிறது.

