
நாட்டில் முழுமையாக போதைப்பொருள் ஒழிக்கப்பட வேண்டும் – ஞானமுத்து ஸ்ரீநேசன்
நாட்டில் முழுமையாக போதைப்பொருள் ஒழிக்கப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
நேற்று (07) மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில,
“தற்போது வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக இந்தோனேசியாவில் இருந்து 5 போதைப்பொருள் வியாபாரிகள் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்குள் கொண்டு வரப்பட்டிருக்கின்றார்கள்.
அதனைத் தொடர்ந்து நுவரேலியாவில் மெத்தெனிய மற்றும் தங்காலை போன்ற இடங்களில் போதைப்பொருட்கள் தயாரிப்பதற்கான இரசாயனங்கள் நிலத்தடியில் இருந்து பெறப்பட்டிருக்கின்றன.
கிட்டத்தட்ட 50,000 கிலோ கிராம் எடையுள்ள போதைப்பொருள் உற்பத்தி செய்யக்கூடிய இரசாயனங்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.
உண்மையில் கிளீன் ஸ்ரீலங்கா எனும் திட்டத்தின் கீழ் இவ்வாறு போதைப்பொருட்களுக்குரிய மூலப்பொருட்கள் அல்லது இரசாயனங்கள் கைப்பற்றுவதென்பது நாங்கள் வரவேற்கின்றோம்.
ஆனால் இந்த அளவிற்கு அதிகமான போதைப் பொருட்கள் இலங்கைக்குள் வந்திருக்கின்றது என்றால் நிச்சயமாக போதைப்பொருள் வியாபாரிகளோ அல்லது முக்கியஸ்தர்களாலோ, இது முடிந்திருக்காது.
இதற்குப் பின்னால் பலமான அரசியல் சக்திகள் இருந்திருக்கின்றன அதற்கு துணையாக பொலிஸ் சக்திகளும் இருந்திருக்க வேண்டும்” என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

