
அதிக விலையில் அரிசி விற்பனை செய்தமை தொடர்பில் 900ற்கும் அதிக வழக்குகள்
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் அரிசி தொடர்பாக சுமார் 3,000 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதிக விலையில் அரிசி விற்பனை செய்தல், அரிசி இருப்புக்களை பதுக்கி வைத்தல் ,நுகர்வுக்கு பொருத்தமற்ற அரிசியை விற்பனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான 3,000 சோதனைகள் இதுவரை நடத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதிக விலையில் அரிசி விற்பனை செய்வது தொடர்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், இந்த விடயத்தில் 900ற்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதிக விலையில் அரிசி விற்பனை செய்யும் ஒரு தனிப்பட்ட தொழிலதிபருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டால், அவருக்கு 100,000 ரூபாய் முதல் 500,000 ரூபாய் வரை அபராதம் அல்லது 5 மாத சிறைத்தண்டனை அல்லது அபராதமும் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
ஒரு தனியார் நிறுவனம் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், 5 லட்ச ரூபாய் முதல் 50 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரிசி பதுக்கல் தொடர்பாக ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அபராதம் அல்லது சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். மேலும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் தொடர்புடைய பொருட்களை பறிமுதல் செய்யபடலாம் என்றும் அதிகாரசபை தெரிவித்துள்ளது
மேலும், இரண்டாவது முறையாகவும் இவ்வாறு குற்றமிழைத்தால் , குறைந்தபட்ச அபராதத்தின் இரு மடங்கு அபராதம் நீதிமன்றத்தால் விதிக்கப்படலாம் எனவும் ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

