
வேலைநிறுத்தத்தால் இன்று பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு
அரசாங்கம் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கவில்லை என தெரிவித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு இன்று அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறது.
இதன் காரணமாக இன்று , பல்கலைக்கழகங்களில் விரிவுரைகள் மற்றும் பிற நடவடிக்கைகள் இடமபெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் இன்னும் முறையாக ஆட்சேர்ப்பு செய்யாததன் பின்னணியில் எழுந்துள்ள பற்றாக்குறை, சம்பளப் பிரச்சினை, பல்கலைக்கழக அமைப்பின் வசதிகளில் முன்னேற்றம் இல்லாமை மற்றும் ஆராய்ச்சிக்கான ஒதுக்கீடுகள் தொடர்ந்து குறைவாக இருப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படுகிறது.
அரச அதிகாரிகளுடன் பல சந்தர்ப்பங்களில் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், இதுவரை எந்த தீர்வும் எட்டப்படவில்லை என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஒரு நாள் வேலைநிறுத்தம் காரணமாக, கொழும்பு, பேராதனை, ருஹுணு, ரஜரட்ட, யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள பல அரசு பல்கலைக்கழகங்களில் விரிவுரைகள் உட்பட அனைத்து கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை விரிவுரையாளர்கள் தங்கள் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை கோரி இன்று பிற்பகல் பல்கலைக்கழகங்களுக்கு முன்பாக ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

